நடிகர் சரத்குமாருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
நடிகர் சரத்குமார் கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் நடிகர் சோனு சூட்டையும், சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரகுமானையும் சந்தித்தது குறித்துச் செய்திகள் வந்திருந்தன. மேலும் சரத்குமாரின் சமீபத்திய புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் சரத்குமாருக்குக் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவரது மனைவி ராதிகா கூறியுள்ளார்.
"இன்று சரத்குமாருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் ஹைதராபாத்தில் இருக்கிறார். அறிகுறிகள் எதுவும் இல்லை. சிறந்த மருத்துவர்கள் அவருக்கு மிகச் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகின்றனர். வரும் நாட்களில் அவரது உடல்நிலை பற்றித் தொடர்ந்து தகவல் பகிர்கிறேன்" என்று ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சரத்குமாரின் மகளான வரலட்சுமி, "அப்பாவுக்கு கோவிட் தொற்று வந்திருக்கிறது. தற்போது ஹைதராபாத்தில் நல்ல மருத்துவர்கள் கண்காணிப்பில் தேறி வருகிறார். தொடர்ந்து உங்களுக்குத் தகவல் பகிர்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.