தீபாவளி கொண்டாட்டம்: சன் டிவியின் பலே திட்டம்?

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகைக்கு மக்களை கவர்வதற்காக சன் டிவி புதிய திட்டமொன்றை வகுத்துள்ளது.

இந்தாண்டு கரோனா அச்சுறுத்தலால் 8 மாதங்களாக எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. இதனால் தீபாவளி பண்டிகைக்கு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு எந்தவொரு புதிய படங்களுமே இல்லை. ஏனென்றால், திரையரங்குகளில் வெளியாகி சுமார் 100 நாட்களுக்குப் பிறகே தொலைக்காட்சிகளில் படங்கள் ஒளிபரப்ப வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால், இந்தாண்டு நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. என்னவென்றால், பல்வேறு படங்கள் திரையரங்குகளில் இல்லாமல் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்பட்டுவிட்டன. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு பின்பு ஓடிடி வெளியீடு என்ற ரீதியில் பேச்சுவார்த்தையில் இறங்கின.

இந்தப் பேச்சுவார்த்தையில் சன் டிவி நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து 'பூமி' படத்தைக் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. தீபாவளி அன்று மாலை சன் டிவியில் ஒளிபரப்பிவிட்டு, அடுத்த நாள் முதல் சன் நெக்ஸ்ட்டில் இருப்பது போல ஒப்பந்தம் போட்டுள்ளது. ஹாட் ஸ்டார் நிறுவனமும் இந்தப் படத்துக்குப் போட்டியிட்டது. இறுதியில் 'பூமி' படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றிவிட்டது சன் டிவி நிறுவனம்.

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'பூமி'. இது ஜெயம் ரவியின் 25-வது படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது கரோனா அச்சுறுத்தலால் இந்த முடிவை எடுத்துள்ளது 'பூமி' படக்குழு.

இந்த ஒப்பந்தம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE