'பேச்சிலர்' படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

'பேச்சிலர்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்று, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பேச்சிலர்'. ஜி.வி.பிரகாஷ், திவ்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வந்தது.

கரோனா அச்சுறுத்தலால் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, 'பேச்சிலர்' படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படமாக்கினார்கள். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கவுரவக் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் ஜி.வி.பிரகாஷ் - திவ்யா பாரதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார்கள். தற்போது 15 நாட்கள் படப்பிடிப்பைத் தொடர்ந்து ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக 'பேச்சிலர்' படக்குழு அறிவித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பங்களித்துள்ளார்.

இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'பேச்சிலர்' படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE