உங்களை எப்போதும் நேசிக்கிறோம் தல தோனி என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. இதனால் நேற்று (அக்டோபர் 2) நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணி உடனான போட்டியை ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஆனால், தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் கடைசி வரை களத்திலிருந்து சென்னை அணியின் வெற்றிக்காகப் போராடினார் தோனி. 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார் தோனி. ஆனால் அதிகமாக ரன்களை ஓடி எடுத்ததால் கடுமையாகச் சோர்வடைந்தார் தோனி. இதனால், சென்னை அணி தோற்றாலும் நீங்கள் எப்போதுமே எங்கள் ஹீரோ தான் தோனி என்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
» மீண்டும் ஸ்பைடர்மேனுக்கு வில்லனாகும் ஜேமீ ஃபாக்ஸ்
» அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போன ‘நோ டைம் டு டை’ - ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் அதிருப்தி
இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நாங்கள் உங்களை எப்போதும் நேசிக்கிறோம் தல தோனி. நோயிலும், ஆரோக்கியத்திலும், எப்போதும் உங்களோடு நாங்கள் இருப்போம். இறுதி ஆட்டத்திலும் நாங்கள் இருப்போம். என்றென்றும் சிஎஸ்கே"
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.