பவன் கல்யாண் பதிலால் மகிழ்ந்த சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

'ஊதா கலரு ரிப்பன்' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நேற்று (செப்டம்பர் 2) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'வக்கீல் சாப்' படத்தின் புதிய போஸ்டர் மற்றும் க்ரிஷ் இயக்கி வரும் படம், ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ஆகியவற்றின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

நேற்று (செப்டம்பர் 2) சமூக வலைதளத்தில் அனைத்து நடிகர்களுமே பவன் கல்யாண் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இன்று (செப்டம்பர் 3) தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைத்து நடிகர்களுக்குமே பவன் கல்யாண் நன்றி தெரிவித்து வருகிறார்.

பவன் கல்யாண் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து சிவகார்த்திகேயன் ட்வீட் செய்திருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பவன் கல்யாண் கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த சிவகார்த்திகேயன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துகள். உங்களின் 'ஊதா கலரு ரிப்பன்' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தனையோ முறை அதைக் கண்டு ரசித்திருக்கிறேன்".

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உங்கள் பதிலைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது சார். 'ஊதா கலர் ரிப்பன்' பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தது என அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். நேரம் ஒதுக்கி அன்பை ஏற்றுக் கொண்டமைக்கும் உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய நன்றி சார்".

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE