வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது: ரஜினி

By செய்திப்பிரிவு

வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று ரஜினி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் இளைய சகோதரரான வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். தொழிலதிபராக விளங்கும் வசந்தகுமார், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். சமீபகாலமாக அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

கரோனா பரிசோதனை செய்தபோது வசந்தகுமாருக்கும் அவரது மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆகஸ்டு 10-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டனர்.

முதலில் சீராக இருந்த வசந்தகுமாரின் உடல்நிலை பின்பு மோசமடைந்தது. ஆனால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்றிரவு (ஆகஸ்ட் 28) 7 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவருடைய உயிர் பிரிந்தது.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி தொடங்கி பலரும் வசந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தற்போது வசந்தகுமாரின் மறைவை முன்னிட்டு ரஜினி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அருமை நண்பர் வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்".

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE