லாரன்ஸுக்கு நாயகியாகும் கியாரா அத்வானி?

By செய்திப்பிரிவு

லாரன்ஸுக்கு நாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து 'சந்திரமுகி 2' குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது ரஜினியின் அனுமதியுடன் 'சந்திரமுகி 2' உருவாகிறது. பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

'சந்திரமுகி 2' படத்தில் லாரன்ஸுக்கு நாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள 'லட்சுமி பாம்' படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் கியாரா அத்வானி. ஆகையால், 'சந்திரமுகி 2' படத்தில் கியாரா அத்வானி நடிக்கக்கூடும் என்று பலரும் கருதினார்கள்.

ஆனால், படக்குழுவினரோ இந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும் , இன்னும் நாயகி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE