சுற்றுச்சூழல் காக்க நம் மெளனம் கலைப்போம் என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவு அறிக்கைக்கு எதிராக சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.
'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள்' வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இந்த வரைவு அறிக்கை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
நேற்று (ஜூலை 28) தனது 'உழவன் ஃபவுண்டேஷன்' அமைப்பின் மூலமாக கார்த்தி வெளியிட்ட அறிக்கையில் "மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020' வரைவு (Environmental Impact Assessment - EIA 2020) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
இந்த வரைவு அறிக்கையில், "பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்துக் கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்" என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும் அச்சத்தையும் உருவாக்குகிறது. நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்?" என்று தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். (கார்த்தி அறிக்கையை முழுமையாக படிக்க.. CLICK HERE)
» சிவகுமார் குடும்பத்துப் படங்களை ஓடிடி தளத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும்: ரோகிணி பன்னீர்செல்வம்
தற்போது கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கொளிட்டு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்”
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.