அஜித் படத்தின் வெற்றிக்கு விஜய் வைத்த விருந்து

'மங்காத்தா' படத்தின் வெற்றிக்காக விஜய் வைத்த விருந்து குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மங்காத்தா'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார். யுவன் இசையமைத்திருந்தார். அஜித் ரசிகர்கள் மத்தியில் 'மங்காத்தா' படத்துக்கு என்று ஒரு தனி இடமுண்டு.

இந்தக் கரோனா ஊரடங்கில் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் நேரலையில் கலந்துரையாடினார் இயக்குநர் வெங்கட் பிரபு. இதில் பல்வேறு பாடல்களைப் பாடி ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு உள்ளிட்டோர் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதில் விஜய் படத்தின் புகைப்படத்தைக் காட்டி, இவரைப் பற்றி என்று வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது

அவர் கூறியதாவது:

" 'சிவகாசி' படத்தில் விஜய் சாரோடு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். முன்பிலிருந்தே விஜய் சாரை ரொம்ப நல்லா தெரியும். 'மங்காத்தா' படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய ட்ரீட்டே கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு அந்தப் படம் அவ்வளவு பிடித்திருந்தது.

அதற்குப் பிறகு நிறைய ஐடியாக்கள் பேசினோம். எப்போது வேண்டுமானாலும் கதை தயாரானவுடன் வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். சீக்கிரமாக அவரை இம்ப்ரஸ் பண்ணும் வகையில் ஒரு நல்ல கதையுடன் சந்திக்க வேண்டும். அவரோடு வித்தியாசமான ஒரு படம் பண்ண வேண்டும் என்பதுதான் ஆசை.

இப்போது விஜய் சார் வித்தியாசமான கதைகளில் நடிக்கிறார். கமர்ஷியல் விஷயங்களுடன் புதிதாகச் செய்ய வேண்டும் என நினைக்கிறார். பெரிய முதலீடு என்பதால் அனைவருமே சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலைதான் விஜய் சாரிடம் உண்டு".

இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE