சீன தயாரிப்புகளை ஒதுக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது. சமீபத்தில் நடத்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
இது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது. இதனிடையே இந்தியாவில் பல்வேறு இடங்களில் சீன தயாரிப்புகளை வாங்கமாட்டோம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், சீனாவில் தயாராகி பிரபலமாகியுள்ள செயலிகளையும் பலர் நீக்கி வருகிறார்கள்.
தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான், தனது டிக்-டாக் மற்றும் ஹலோ செயலிகளில் இருந்த தனது கணக்கினை நீக்கிவிட்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். ஜிப்ரானின் இந்தச் செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.