2500 கலைஞர்களுக்கு வங்கிக் கணக்கில் 1000 ரூபாய்: தந்தை நினைவு நாளில் ஐசரி கணேஷ் உதவி

By செய்திப்பிரிவு

தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு 2500 கலைஞர்களுக்கு 1000 ரூபாய் விதம் ஐசரி கணேஷ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19-ம் தேதியிலிருந்து தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் தினசரித் தொழிலாளர்கள், நலிந்த நடிகர்கள் உள்ளிட்ட பலரும் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதில் நலிந்த நாடக நடிகர்களுக்கு உதவுவதற்காக நிதியுதவி கோரி நடிகர் சங்கத்தின் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். உடனே ஐசரி கணேஷ் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். மேலும் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இதனிடையே, இன்று ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலனின் 33-வது நினைவு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் தந்தையின் நினைவு நாளில் ஆயிரம் நலிந்த நாடக நடிகர்களுக்கு அறுசுவை உணவும், புத்தாடைகளும் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ஐசரி கணேஷ்.

தற்போது கரோனா ஊரடங்கினால் இதைச் செய்ய முடியவில்லை. இந்நிலையில், பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்குப் போராடுவதால் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். எப்படியென்றால் 2500 கலைஞர்களுக்கு 1000 ரூபாய் விதம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார் ஐசரி கணேஷ்.

இந்தப் பணம் சிறியதாக இருந்தாலும், அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கும், மருத்துவச் செலவுக்கும் உதவும் என்று ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE