மோகன்லால், அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ள 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியாகிறது. தமிழில் தயாரிப்பாளர் தாணு வெளியிடுகிறார்.
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'காலாபானி'. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாளப் படமும் இதுதான். இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’என்ற பெயரில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டார்.
தற்போது 'காலாபானி' வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் பிரபுவும் மலையாளப் படமான 'மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தையும் ப்ரியதர்ஷனே இயக்குகிறார். தமிழில் இப்படம் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' எனும் பெயரில் வெளியாக உள்ளது.
» ரத்தம் கொட்டிய நிலையிலும் நடித்த அருண் விஜய்: ஜி.என்.ஆர்.குமாரவேலன் ஆச்சரியம்
» நடிகர் பகிர்ந்த போட்டோஷாப் புகைப்படம்: நன்றி சொன்ன ட்ரம்ப் மகள்
அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, முகேஷ் ,நெடுமுடி வேணு, பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா என மிகப்பெரிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினைக் கவனிக்கிறார். ரோனி நபேல் இசையமைக்கிறார் . வரும் மார்ச் 26 ஆம் தேதி தமிழகமெங்கும் இப்படம் வெளியாகிறது.
படம் குறித்து தயாரிப்பாளர் தாணு கூறுகையில், " 'சிறைச்சாலை' எனும் பிரம்மாண்ட படைப்பில் உருவான இந்தக் கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவியப் படைப்பாக 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தை உருவாக்கியுள்ளது. இப்படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்" என்றார்.