ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்மகள் வந்தாள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜாக்பாட்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜோதிகா. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொடைக்கானில் தொடங்கி நடைபெற்றது. க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்து மீதமுள்ள காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டுத் திரும்பியது.
சென்னையில் க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பை முடித்து, ஒட்டுமொத்தமாகப் படப்பிடிப்பு முடிவுற்றதாக அறிவித்தது படக்குழு. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதன் மூலம், இந்தப் படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், மார்ச் 27-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.
இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் ஜோதிகாவுடன் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ரூபன் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
» அதிக கதாபாத்திரங்களைக் கொண்டு 'ஒத்த செருப்பு' உருவாகுமா? - பார்த்திபன் பதில்
» வைரலாகும் ஆர்யாவின் ஜிம் வொர்க்-அவுட் வீடியோ: பிரபலங்கள் வேண்டுகோள்