ஆர்.சுந்தர்ராஜன் உடல்நிலை குறித்து வதந்தி: மகன் விளக்கம்

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் உடல்நிலை குறித்து வதந்தி பரவி வந்த நிலையில், மகன் அசோக் சுந்தர்ராஜன் தனது ஃபேஸ்புக் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் ஆர்.சுந்தர்ராஜன். அதனைத் தொடர்ந்து 'நான் பாடும் பாடல்', 'வைதேகி காத்திருந்தாள்', 'அம்மன் கோயில் கிழக்காலே' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியுள்ளார்.

1997-ம் ஆண்டில் விஜய் நடிப்பில் 'காலமெல்லாம் காத்திருப்பேன்' படத்தை இயக்கினார். பிறகு படங்களில் நடிக்கத் தொடங்கினார். பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தார். 2013-ம் ஆண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் 'சித்திரையில் நிலச்சோறு' படம் வெளியானது. சமீபமாக அவ்வப்போது ஆர்.சுந்தர்ராஜனின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதும், அதற்கு அவர் மறுப்புச் சொல்வதுமாக இருந்து வருகிறது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் ஆர்.சுந்தர்ராஜன் காலமாகிவிட்டார் என்று வதந்தி பரவியது. பலருமே அவருடைய தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளனர். இந்த வதந்தி தொடர்பாக ஆர்.சுந்தர்ராஜனின் மகன் அசோக் சுந்தர்ராஜன் தனது ஃபேஸ்புக் பதிவில், "நண்பர்களே, இது என் தந்தை ஆர் சுந்தர்ராஜன் (இயக்குநர் மற்ற்றும் நடிகர்) நலமாக இருக்கிறார்.

சென்னையில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார். தயவுசெய்து எந்த ஒரு புரளியையும், மீம்ஸையும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அவரது உடல்நலத்துக்கு எந்தக் கேடும் இல்லை. அவர் நலமாக, சுறுசுறுப்பாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார் அசோக் சுந்தர்ராஜன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE