தமிழ் மொழியை தெளிவாக பேசவும் முயற்சி செய்ய வேண்டும் என்று 'உறுமீன்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
‘உறுமீன்’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந் தது. இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சார்லி, பாபி சிம்ஹா, கலையரசன் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:
‘‘நான் மூன்று தலைமுறை கலைஞர்களை பார்த்து விட்டேன். பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இப்போது வரைக்கும் உள்ள தலைமுறை வரைக்கும் பார்ப்பது என்பதும் மகிழ்ச்சிதான். இன் றைக்கு தமிழ் சினிமா அமானுஷ்ய வளர்ச்சி அடைந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளைஞர்களின் படங்கள் பிரம்மாண்டப் படுத்துகிறது. அந்த நாட்களில் 10 தயாரிப்பாளர்கள் இருப்பார்கள். இப்போது 100 தயாரிப்பாளர்கள், 200 இயக்குநர்கள், ஆண்டுக்கு 300 படங்கள் என்று தமிழ் சினிமா வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சி தேவைதான்.
சில படங்களை பார்க்கும்போது அதிலுள்ள வசன உச்சரிப்பு படத்தை பார்க்கும் ஆசையை ஏற்படுத்துவதில்லை. இன்னும் பெரிய உயரத்துக்கு தமிழ் சினிமா போக வேண்டும். அதே நேரத்தில் தமிழ் படம் தனித்து அடையாளம் பெற்று உயர வேண்டும். இது தமிழ் கலாச்சாரப் படம் என்பதை அடையாளப்படுத்த வேண்டும். இன்றைக்கு போட்டோகிராஃபி, கொரியோகிராபி, சண்டை இதெல் லாம் இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழ் சினிமாதான் வளர்ந்து நிற்கிறது. அதேபோல படத்தில் தமிழ் மொழியை தெளிவாக பேசவும் முயற்சி செய்ய வேண்டும்." என்று பேசினார்.