'பொன்னியின் செல்வன்' பணிகளால் 'இந்தியன் 2' படத்திலிருந்து விலகல்: ரவிவர்மன் முடிவு

'பொன்னியின் செல்வன்' படப் பணிகளால், 'இந்தியன் 2' படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் விலகியுள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தைச் சுற்றி நிலவி வந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்புக்குச் செல்லவுள்ளது படக்குழு. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

முதலில் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் ஒப்பந்தமானார். ஆனால், 'இந்தியன் 2' படத்துக்கு ஏற்பட்ட தாமதத்தால் அப்படத்திலிருந்து விலகியுள்ளார் ரவிவர்மன். ஏனென்றால், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் எனத் தெரிகிறது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்த ரவிவர்மன் முடிவு செய்துள்ளார்.

'இந்தியன் 2' படத்திலிருந்து ரவிவர்மன் விலகியிருப்பதால், தற்போது வேறொரு ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இதில் ரத்னவேலு தான் முன்னணியில் இருக்கிறார். விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர். தற்போது தெலுங்கில் 'ரங்கஸ்தலம்', சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'சைரா' மற்றும் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ஆகியவற்றில் பணிபுரிந்து வருகிறார். அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வரும் படமாக 'இந்தியன் 2' இருக்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE