சென்னை திரும்புகிறார் விஜய்: ஜூலை 1-ல் அட்லீ பட வேலை துவக்கம்

By ஸ்கிரீனன்

லண்டன் சென்றிருக்கும் விஜய் 26ம் தேதி சென்னை திரும்பும் விஜய், ஜூலை 1ம் தேதி முதல் அட்லீ படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பலர் விஜய்யோடு நடித்து வந்தார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வந்தார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்து வந்ததால், தற்போது தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றிருக்கிறார் விஜய். இம்முறை தனது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி சென்னையில் இல்லை. ஜூன் 26ம் தேதி தான் சென்னை திரும்ப திட்டமிட்டு இருக்கிறார்.

'புலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கவிருக்கும் படத்திற்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய். சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1ம் தேதி சென்னையில் துவங்க இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE