அஜித் உடனான படம் இன்னும் முடிவாகவில்லை என்று இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து 'வீரம்' சிவா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் அஜித். அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், சூரி, கபீர் கான் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. முதலில் விஷ்ணுவர்தன் இயக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்க இருக்கிறார் என்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இச்செய்தி குறித்து வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விசாரித்த போது, "இச்செய்தியில் உண்மையில்லை. ஆனால், தற்போதைக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை" என்று தெரிவித்தார்கள்.
மேலும், இச்செய்தி குறித்து இயக்குநர் சுசீந்திரன் "அஜித் சார் படம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பணிபுரிய விரும்புகிறேன். அவ்வாறு நடைபெற்றால் உங்களுடன் முதலில் பகிர்ந்துகொள்கிறேன்" என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.