விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் அட்லீ இயக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது.
படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய், இயக்குநர் மகேந்திரன், நடிகர் பிரபு, தயாரிப்பாளர் எஸ்.தாணு, படத்தின் இயக்குநர் அட்லீ, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் உடன் இணையும் படத்தின் சிறப்புகள் குறித்து அட்லீ கூறியதாவது :-
படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் வரைக்கும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். படத்தில் இயக்குநர் மகேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நடிப்பாரோ, மாட்டாரோ என்றுதான் அவரிடம் கதையை சொல்வதற்குச் சென்றேன். கதை அவருக்குப் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார்.
நடிகை மீனாவின் குழந்தை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். குறிப்பாக பிரபு, ராதிகா இருவரும் நடிக்கிறார்கள்.
மற்றபடி தொழில்நுட்ப கலைஞர்கள் பெரும்பாலும் ‘ராஜா ராணி’ படக்குழுவினர்தான். இசை ஜி.வி.பிரகாஷ். பாடல்கள் அனைத்தும் தயார். ஒளிப்பதிவு வில்லியம் சி.ஜார்க் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.