ரஜினி, அஜித், சூர்யா மூவரையுமே இயக்க விரும்புவதாக 'பாகுபலி' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமெளலி தெரிவித்தார். ஆனால், கதைதான் முக்கியப் பங்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 10-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
'பாகுபலி' தமிழ் பதிப்பின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்திருந்த ராஜமெளலியிடம் எந்த தமிழ் நடிகருடன் இணைந்து படம் இயக்க ஆசை என்று கேள்வி எழுப்பினார்கள்.
அக்கேள்விக்கு இயக்குநர் ராஜமெளலி, "எந்த இயக்குநரைக் கேட்டாலும் முதலில் ரஜினி சார் பெயரைத் தான் சொல்லுவார்கள். எனக்கு ரஜினி சாரை இயக்கும் ஆசை இருக்கிறது.
எனக்கு சூர்யா சாரும் நெருக்கமான நண்பர். இரண்டு முறை அஜித் சாரை சந்தித்து பேசியிருக்கிறேன். அஜித் ஒரு நல்ல மனிதர். இவர்கள் அனைவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்கு இவர்களுடன் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
கதை தான் மிகவும் முக்கியம். அவர்களிடம் சென்று இந்த மாதிரியான கதை பண்ணலாமா என்று தான் கேட்க வேண்டுமே தவிர, நாம் இருவரும் இணைந்து படம் பண்ணலாமா என்று கேட்கக் கூடாது" என்று தெரிவித்தார்.