30 சதவீத உழைப்பை பொதுவாழ்க்கைக்கும், மரக்கன்று நடுவதற்கும், 70% உழைப்பை தொழிலில் காட்டுமாறும் விவேக்கிற்கு அப்துல் கலாம் அறிவுரை கூறியுள்ளார்.
விவேக் நாயகனாக நடித்திருக்கும் 'பாலக்காட்டு மாதவன்' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சோனியா அகர்வால், 'செம்மீன்' ஷீலா உள்ளிட்ட பலர் விவேக்குடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஏன் காமெடி வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, "இரண்டரை ஆண்டுகளாக பெரிய படங்கள் எதுவும் செய்யவில்லை. கிரீன் க்ளோப் என்ற அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் 27 லட்சம் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இட்ட கட்டளை.
மரக்கன்று நடுவதால் தென் மாவட்டங்களில் பெரிய ஸ்டார் அளவுக்கு என்னை கொண்டாடுகிறார்கள். அதனால் சினிமாவில் ஆர்வம் குறைந்தது. இதனை யாரோ அப்துல் கலாம் ஐயாவிடம் தெரிவித்துவிட்டார்கள். ஆகையால் சமீபத்தில் எனக்கு போன் செய்து, "30 சதவீத உழைப்பை பொதுவாழ்க்கைக்கும், மரக்கன்று நடவும் செலவழியுங்கள். 70 சதவீத உழைப்பை தொழிலில் காட்டுங்கள், சினிமாவில் கவனம் செலுத்துங்கள், குடும்பத்தைக் கவனியுங்கள் என்று தெரிவித்தார்.
அவருடைய வார்த்தையை ஏற்று இப்போது மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறேன்." என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் விவேக்.