போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் விக்ரம்?

'ராஜதந்திரம்' இயக்குநர் அமித் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் விக்ரம்.

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்கும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் இறுதிகட்டப் பணிகள் துவங்கி இருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது.

அப்படத்தைத் தொடர்ந்து 'அரிமா நம்பி' இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம். காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் இருவரும் நாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள். விரைவில் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படங்களைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் விக்ரம். அதில் 'ராஜதந்திரம்' இயக்குநர் அமித்தும் ஒருவர். அமித் கூறிய கதை விக்ரமுக்கு பிடித்துவிடவே, கைவிடப்பட்ட 'கரிகாலன்' படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை பண்ண இருக்கிறார்.

ஜிப்ரான் இசையமைக்க இருக்கும் இப்படத்தில், விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ராஜதந்திரம்' படம் போலவே த்ரில்லர் பாணியில் இக்கதையை உருவாக்கி இருக்கிறாராம் இயக்குநர் அமித். இக்கதையைக் கேட்டவுடன் தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் விக்ரம்.

ஆனந்த் ஷங்கர் மற்றும் அமித் இருவரது படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க விக்ரம் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE