மீண்டும் இணையும் கெளதம் மேனன் - சிம்பு கூட்டணி!

’அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் கெளதம் மேனன் - சிம்பு கூட்டணி இணைந்து ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. இடையே அஜித் படத்தை இயக்க கெளதம் மேனன் ஒப்பந்தமானதால், சிம்பு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அஜித் படமான 'என்னை அறிந்தால்' முடித்தவுடன், சிம்பு படத்தை இயக்குவேன் என்று கெளதம் மேனன் அறிவித்தார்.

'என்னை அறிந்தால்' வெளியான உடன், சிம்பு படத்தை துவக்கினார் கெளதம் மேனன். தற்போது தேதிகள் பிரச்சினை காரணமாக நாயகியாக நடித்து வந்த பல்லவி சுபாஷை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். தற்போது மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் வரும் கேரளா காட்சிகள் போல, 'அச்சம் என்பது மடமையடா' படத்திலும் கேரளா காட்சிகள் இருக்கிறது. அதனைப் படமாக்குவதற்கு படக்குழு கேரளா சென்றிருக்கிறது.

மேலும், கெளதம் மேனன் - சிம்பு இருவருமே இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். 'அச்சம் என்பது மடமையடா' வெளியாகும் தருவாயில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE