'சண்டக்கோழி 2' படத்தின் நாயகிக்கு தமன்னா, சமந்தா ஆகியோரை அணுகவில்லை என நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார் விஷால். காஜல் அகர்வால், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் பாடல் காட்சிகள் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
'பாயும் புலி' படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால். தானே நாயகனாகவும் நடித்து தயாரிக்கவும் இருக்கிறார். ராஜ்கிரண், சூரி ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கும் 'சண்டக்கோழி 2'வில் முதல் பாகத்தின் நாயகி மீரா ஜாஸ்மின் கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
நாயகியாக நடிப்பதற்கு சமந்தா மற்றும் தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு விஷால் மறுப்பு தெரிவித்திருக்கிறார்
"'சண்டக்கோழி 2' படத்திற்காக தமன்னா அல்லது சமந்தா யாரையும் நான் அணுகவில்லை. அப்படத்தின் கதை விவாதம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் விஷால்.
'சண்டக்கோழி 2'வில் நடித்துக் கொண்டே பாண்டிராஜ் இயக்கவிருக்கும் படத்திலும் விஷால் நடிக்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.