அப்புக்குட்டி போர்ட்ஃபோலியோவுக்காக அஜித் எடுத்த அவதாரம்

தேசிய விருது பெற்ற உறுதுணை நடிகர் அப்புக்குட்டிக்கு தமிழ் சினிமாவில் உரிய வாய்ப்புகள் கிடைப்பதற்காக, அவருக்காக நல்ல புகைப்படத் தொகுப்பு ஒன்றை உருவாக்கி, அவரிடம் தரமான போர்ட்ஃபோலியோவைத் தருவதற்காக புரஃபஷனல் புகைப்படக் கலைஞர் அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் அஜித்.

அப்புக்குட்டியை வைத்து அஜித் குறும்படம் இயக்கவில்லை; புகைப்படங்கள் மட்டுமே எடுத்தார் என்று அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பின் இடையே அப்புக்குட்டியை வைத்து அஜித் ஒரு குறும்படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இச்செய்திக்கு அஜித் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உண்மையில் நடந்தது என்னவென்றால், அப்புக்குட்டியிடம் அஜித் "ஏன் ஒரே மாதிரியான பாத்திரங்களிலேயே நடிக்கிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு "எனக்கு எல்லாம் வேறு என்ன வேடம் சார் கிடைக்கும்?" என்று தெரிவித்திருக்கிறார் அப்புக்குட்டி.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது உங்களை வைத்து நான் ஒரு போட்டோ ஷுட் பண்ணி தருகிறேன்" என்று அப்புக்குட்டியிடம் அஜித் தெரிவித்திருக்கிறார். அஜித் நம்மை வைத்து போட்டோ ஷுட் செய்ய இருக்கிறார் என்று சந்தோஷத்தில் மூழ்கி இருக்கிறார் அப்புக்குட்டி.

சிவா படப்பிடிப்புக்கு இடையே, நேரம் கிடைத்தபோது அப்புக்குட்டியை அழைத்திருக்கிறார் அஜித். ஒரு போட்டோ ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்து, அப்புக்குட்டிக்கு விதவிதமான உடைகள் கொடுத்து போட்டோ ஷூட் செய்து கொடுத்திருக்கிறார். அப்புக்குட்டியை அஜித் எடுத்த புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட இருக்கிறார்கள்.

குறும்படம் குறித்து அஜித் தரப்பில் இருந்து, "நடிகர் அஜித் குறும்படம் இயக்கப்போவதாக உலவி வரும் செய்தி பொய்யானது. அப்புக்குட்டி விளம்பர மாடலாகவும், அஜித் புகைப்படக் கலைஞராகவும் இருப்பதைப் போல வெளியான புகைப்படம் அது. அதைப் பற்றிய அதிகார்பூர்வ செய்தி விரைவில் வெளியிடப்படும்" என்று செய்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அப்புக்குட்டி தனது பெயரை 'அப்புக்குடி என்கிற சிவபாலன்' என்று மாற்றி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE