உறுமீன் ட்ரெய்லருக்கு அனுமதி மறுப்பு: சர்ச்சைக்குரியதா இந்த ஒற்றை வாக்கியம்?

'உறுமீன்' ட்ரெய்லருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்படக்குழு மறுதணிக்கைக்கு சென்றுள்ளது.

சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க சக்திவேல் பெருமாள்சாமி இயக்கி இருக்கும் படம் 'உறுமீன்'. அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ட்ரெய்லர் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

'உறுமீன்' ட்ரெய்லரை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காட்டினார்கள். அதற்கு சென்சார் குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி "'உறுமீன்' படத்தை தணிக்கைக் குழு நிராகரித்துவிட்டது. அதற்கு காரணம் "REVENGE IS ALWAYS ULTIMATE" என்ற வாக்கியம் இடம்பெற்றிருப்பது தான்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரு வாக்கியத்துக்காக படத்தை தணிக்கைக் குழு நிராகரித்திருப்பதை இப்போது தான் காண்கிறோம்.

தணிக்கைக் குழுவின் விதிகளும் அவர்கள் முன்வைக்கும் வாதங்களும் அவசியமற்றதாக உள்ளது. பல படங்களில் அநாகரீகமான வார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஆபாசம், வன்முறை என அனைத்தையும் அனுமதிக்கும் குழு, இதனை நிராகரித்திருப்பதற்கான காரணம் புரியவில்லை. எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

ட்ரெய்லரை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்புகிறோம். தணிக்கைக்காக மீண்டும் விண்ணப்பிக்க உள்ளோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE