ரசிகர்கள் கருத்து மோதல்: சல்மான் வழியில் அணுகும் சூர்யா

By ஸ்கிரீனன்

சல்மான் கான் தன் ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தொடர்ச்சியாக ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோரது ரசிகர்கள் யார் முதல் இடம் என்று சண்டையிட்டு வந்தார்கள். இதற்கு சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் "உங்களுக்கு பிடித்த நாயகர்களை வைத்து சண்டை போடுவது நன்றாக இல்லை. இந்த பயணத்தை அழகாக ஆக்குங்கள்.

இதைப் போல அசிங்கமான ட்விட்டர் சண்டையில் பங்கெடுக்க நான் இங்கு வரவில்லை. இதைத் தொடர்ந்தால் ட்விட்டரிலிருந்து வெளியேறிவிடுவேன். இங்கு வந்தது அன்பைப் பரப்ப, சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள, ரசிகர்களுடன் இனிமையாக நேரத்தை செலவிட. அவர்கள் என் துறையை சேர்ந்தவர்களை அவமானப்படுத்துவதை பார்க்க அல்ல. சண்டை போடுவதையோ, அது அசிங்கமாக, ஆபாசமாக மாறுவதையோ நான் விரும்பவில்லை. ட்விட்டர் கொச்சையான வார்த்தைகளை முடக்க வேண்டும்." என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதே போல அஜித், விஜய், சூர்யா ஆகியோரது ரசிகர்கள் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்தார்கள். 'மாசு' படம் வெளியானதில் இருந்தே ரசிகர்களுக்கு இடையே மோதல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சூர்யா "எனது ரசிகர்களும் நலம் விரும்பிகளும் மற்றவர்களின் ரசிகர்களோடு சண்டையிடுவது பிடிக்கவில்லை. உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தோடும் நேரத்தை செலவிட்டு அவர்களைப் பெருமைப்படுத்துங்கள்!" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE