மாசு வசனங்கள்: அஜித் - விஜய் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு விளக்கம்

'மாசு' படத்தில் இடம்பெற்ற அஜித் - விஜய் இருவரது படங்களின் வசனங்கள் மற்றும் பின்னணி இசை தொடர்பான சர்ச்சைக்கு இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்திருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, சமுத்திரக்கனி, பிரேம்ஜி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'மாசு'. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

விஜய் நடித்த 'கத்தி', 'துள்ளாத மனமும் துள்ளும்' மற்றும் அஜித் நடித்த 'ஆரம்பம்', 'வீரம்' உள்ளிட்ட படங்களின் வசனங்கள் மற்றும் பின்னணி இசையினை 'மாசு' படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

அஜித் படத்தின் வசனங்கள் மற்றும் பின்னணி இசையை உபயோகப்படுத்திய வகையில் அவருடைய ரசிகர்கள் பலரும் இயக்குநர் வெங்கட்பிரபுவை வசைபாடி வந்தனர். பலரும் அவருடைய ட்விட்டர் தளத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு இயக்குநர் வெங்கட்பிரபு, " 'மங்காத்தா' படத்தின் போது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் என்னை கிண்டல் செய்து வந்தார்கள். இப்போது நீங்கள் செய்கிறீர்கள். இது ஒன்றும் புதிது இல்லை. நான் 'பிரியாணி' படத்தின் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டத்தை காட்சியாக வைத்ததை எல்லாம் சொல்லாமல், உடனுக்குடன் மறந்து விடுகிறீர்கள்.

நான் தல மற்றும் தளபதி ஆகிய இருவர் படங்களின் இசையை 'மாஸ்' படத்தில் உபயோகப்படுத்த விரும்பினேன். அதனால் தான் உபயோகப்படுத்தினேன். ஆனால், உங்களில் பலருக்கும் சச்சரவை உருவாக்குவதுதான் பிடித்திருக்கிறது" என்று தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலாக தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE