'புலி' கதையைக் கேட்டுவிட்டு, 'இப்படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும், கண்டிப்பாக ஹிட்டாகும்' என்று நடிகர் விஜய்யிடம் அவரது மகன் கூறியிருக்கிறார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்திருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
"இயக்குநர் சிம்புதேவன் இப்படத்தின் கதையை கூறும்போது விஜய் அவரது மகன் சஞ்சய் உடன் உட்கார்ந்து கேட்டார். முதலில் இப்படத்தின் கதை பேண்டஸி சார்ந்து இருப்பதால் தனக்கு சரியாக வருமா என்று யோசித்தார் விஜய்.
சிம்புதேவன் முழுக்கதையையும் கூறிவிட்டு கிளம்பிய உடன், மகன் சஞ்சய் தான் விஜய்யிடம் இப்படத்தை செய்யுமாறு தெரிவித்தார். இப்படத்தில் நடித்தால் பெருமை கிடைக்கும் என்று விஜய்யிடம் சஞ்சய் கூறினார்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
'புலி' படமும் காலப் பயணத்தைப் பற்றிய படம் தான். இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீதேவி ராணியாகவும், அவருடைய மகளாக ஹன்சிகாவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.