ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தில் பிரகாஷ்ராஜை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
'லிங்கா' படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினிகாந்த், இறுதியாக ரஞ்சித் கதையில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார். தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.
மலேசியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கலையரசனும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ரஞ்சித். விரைவில் அப்படத்தில் ஒப்பந்தமாகி விடுவார் என்று பிரகாஷ்ராஜுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
இதுவரை பிரகாஷ்ராஜ், ரஜினியுடன் படம் முழுவதும் வருவது போன்ற ஒரு பாத்திரத்தில் நடித்ததில்லை. 'படையப்பா' படத்தின் இறுதிக் காட்சியில் போலீஸ் அதிகாரியாக சிறு வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார். ஆகவே, ரஜினியுடன் ஒரு படத்தில் விரிவான வேடத்தில் நடித்து விட வேண்டும் என்ற பிரகாஷ்ராஜின் ஆசை ரஞ்சித் படத்தின் மூலம் நிறைவேற இருக்கிறது.