தனுஷின் மாரி இசை வெளியீடு ஜூன் 4-க்கு ஒத்திவைப்பு

மே 25ம் தேதி வெளியாகவிருந்த 'மாரி' படத்தின் இசை, தற்போது ஜூன் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் மூன்றாவது படம் 'மாரி'. தனுஷ் இதில் நாயகனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், காளி வெங்கட், விஜய் யேசுதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும், மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து 'மாரி' திரைப்படத்தைத் தயாரிக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் இசையை மே 25ம் தேதியும், படத்தை ஜூலை 17ம் தேதியும் வெளியிட தீர்மானித்திருப்பதாக தயாரிப்பாளர்களில் ஒருவரான ராதிகா சரத்குமார் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 'மாரி' இசையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் அனைத்து தொழில்நுட்பங்களிலும் படத்தின் இசையை ஒரே நேரத்தில் வெளியிட தீர்மானித்திருக்கிறது. இதனால் படத்தின் இசையை ஜூன் 4ம் தேதி வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். தனுஷ் - அனிருத் கூட்டணியில் 'மாரி' இசை உருவாகி இருப்பதால் இப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE