சிம்பு படத்தில் இருந்து த்ரிஷா விலகியதால், தற்போது கேத்ரின் தெரஸாவை த்ரிஷா வேடத்தில் நடிக்க வைக்க செல்வராகவன் திட்டமிட்டு இருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. த்ரிஷா, டாப்ஸி, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
இப்படத்துக்காக போட்டோ ஷுட் சென்னையில் நடைபெற்றது. அதில் த்ரிஷா கலந்து கொண்டார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
தேதிகள் பிரச்சினை காரணமாக த்ரிஷா இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். கமல் படம், 'அரண்மனை 2' ஆகிய படங்களுக்கு மொத்தமாக தேதிகள் ஒதுக்கி இருப்பதால் செல்வராகவன் படத்தில் இருந்து த்ரிஷா வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. த்ரிஷா இல்லையென்றாலும் மே 11ம் தேதி படப்பிடிப்பு சென்று விடலாம்; அவருக்கு மாற்றாக வேறு ஒரு நாயகியை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தார் இயக்குநர் செல்வராகவன்
இந்நிலையில், தற்போது த்ரிஷாவுக்கு பதிலாக அவ்வேடத்தில் 'மெட்ராஸ்' படத்தின் நாயகி கேத்ரின் தெரஸாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் செல்வராகவன். கடந்த ஞாயிற்றுகிழமை அன்று இருவரும் சந்தித்திருக்கிறார்கள். இறுதியாக கேத்ரின் தெரஸா நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.