காமெடியனாக நடி- பவர் ஸ்டாருக்கு ராதாரவி ஆலோசனை

'பவர் ஸ்டார்' சீனிவாசன் நடிக்க ஆரம்பித்தபோது நடிகனாக அல்லாமல் காமெடியனாக நடி என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார் நடிகர் ராதாரவி

அப்புக்குட்டி, மேகநாசன்,ரோசன்,திருப்பூர் மணி உள்ளிட்ட பலர் நடிக்க, புதுமுக இயக்குநர் உதயா ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் 'வெள்ளை உலகம்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் சங்கச் செயலாளர் ராதாராவி, 'பவர் ஸ்டார்' சீனிவாசன், எழுத்தாளர் பிரபஞ்சன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் நடிகர் ராதாரவி பேசியது, "சீனிவாசன் எனக்கு தம்பி மாதிரி. ஒரு படம் பண்ணுகிறேன் என்று சொன்னார். இங்கு வா, படம் எல்லாம் பண்ணாதே. காமெடியனாக நடி. உன்னுடைய முகத்துக்கு நல்லா இருக்கும் என்று சொன்னேன். சீனிவாசனையும், அவரது மனைவியையும் வீட்டில் அழைத்து வைத்து சொன்னேன்.

எனக்கு சீனிவாசன் நல்ல உள்ளமாக தெரிந்தார். "இல்லை அண்ணே.. நான் நடிக்கிறேன்" என்று சொன்னார். "நீ நடிக்கவே வேண்டாம், எவன் உன்னை நடிக்கச் சொன்னான். நீ வந்து நில்லு, உன்னுடைய முகத்தைப் பார்த்தவுடன் சிரிக்கிறானா, இல்லையா என்று பார்" என சொன்னேன். அந்த வாக்கு நிறைவேறி இருக்கிறது. நான் மேடையில் இருக்கும்போது, சீனிவாசன் வரும் போது கைத் தட்டினீங்க பாருங்க அது தான்.

அதுலயும் பெயரில் பவர் ஸ்டார் என்று இணைத்துக் கொண்டார். உண்மையில் சீனிவாசனுக்கு ஒரு பவர் இருக்கிறது. நான் எல்லாம் படம் எடுத்தால், கண்டிப்பாக சீனிவாசனை உபயோகப்படுத்துவேன். என்னமோ காலத்தின் கட்டாயம், அவருக்கு கட்டங்கள் சரியில்லை என்று நினைக்கிறேன். அது போட்டு அமுக்குகிறது. இல்லையென்றால் பிய்த்துக் கொண்டு வந்துவிடுவார். எந்த நேரத்திலும் வரலாம்." என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் ராதாரவி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE