நிஜ வாழ்க்கையில் காதலித்து வந்த ஜோடி, 'இருவர் ஒன்றானால்' படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே 6 ஆண்டுகள் காதலித்திருக்கிறார்கள்.
'இருவர் ஒன்றானால்' படத்தில் நாயகனாக நடிகர் பிரபுவும் மற்றும் நாயகியாக கிருத்திகா மாலினியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இப்படம் மே 29ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தில் எப்படி இருவரும் இணைந்து நடித்தார்கள் என்று கேட்ட போது, "எனக்கு சொந்த ஊர் சேலம்..சென்னையில் இந்துஸ்தான் கல்லூரியில் பி.இ.முடித்தேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தேன். எனக்கு சினிமா ஆர்வம் உண்டு. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அப்போதுதான் சம்பத்குமார், அன்பு.ஜி இருவரின் பழக்கம் கிடைத்தது. அவர்கள் தனியாக படமெடுப்பது என்று முடிவான போது நான் நாயகனாக நடிப்பது என்று முடிவானது.
கதாநாயகி தேடிய போது தான் நான் கிருத்திகா மாலினியை பற்றிக் கூறினேன். நேரில் பார்த்து தேர்வு செய்தார்கள். நானும் கிருத்திகா மாலினியும் ஒரே நடனப் பள்ளியில் நடனம் கற்றோம்.
ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பித்து, ஆறு ஆண்டுகள் ஆனபின்புதான் சினிமாவில் 'இருவர் ஒன்றானால்' படத்தில் நடித்தோம். ஆரம்பத்தில் கிருத்திகா வீட்டில் காதலுக்கும், நடிப்பதற்கும் சம்மதிக்க வில்லை. பிறகு காதலிக்கும், நடிப்பதற்கும் சம்மதம் வாங்கினோம். 'இருவர் ஒன்றானால்'படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் என்றதும் சம்மதித்தார்கள்
இருவரது வீட்டு சம்மதத்துடன் காதலர் தினத்தின் மறுநாள் 15.2.2015ல் சேலத்தில் திருமணம் நடந்தது. 17ஆம் தேதி சென்னையில் வரவேற்பு.நடந்தது. 'இருவர் ஒன்றானால்' படத்தில் வருவது போல கிருத்திகாவுக்கு முன் என்னை 3 பெண்கள் விரும்பினார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டேன். இன்றும் அவர்கள் என் நண்பர்கள்தான்." என்றார்