முடிவடைந்தது புலி படப்பிடிப்பு: ஜூன் 22ம் தேதி பர்ஸ்ட் லுக்

விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவுற்று இருக்கிறது. ஜூன் 22ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து சாலக்குடி, திருப்பதி வனப்பகுதி என படப்பிடிப்புகள் நடைபெற்றன. தற்போது கம்போடியாவில் விஜய், ஸ்ருதிஹாசன் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்நிலையில், 'புலி' படப்பிடிப்பு முழுவதுமாக முடிவுற்று இருக்கிறது. தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் இதர பணிகளைத் துரிதப்படுத்த இருக்கிறார்கள். விஜய் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாக்கி இருக்கும் படம் 'புலி' என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளன்று 'புலி' பர்ஸ்ட் லுக் வெளியிட தீர்மானித்திருக்கிறோம். விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு செப்டம்பர் 17ம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்து இருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE