'36 வயதினிலே' படம் வெளியாவதை ஒட்டி, அண்ணி ஜோதிகாவுக்கு கார்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஜோதிகா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் '36 வயதினிலே'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை சூர்யா தயாரித்து இருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.
அண்ணி ஜோதிகா மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பி இருப்பதற்கு நடிகர் கார்த்தி, "10 ஆண்டுகளாக திரைத்துறையில் ஒரு கதாநாயகியாக அயராத உழைத்தவர், அடுத்த 8 ஆண்டுகளாக அப்படியே வேறு ஒரு அவதாரத்தில் இருந்து வருகிறார். ஒரு அர்ப்பணிப்பு மிகுந்த தாயாக, இல்லத்தரசியாக, உடல் நலத்தை பேணுவதில் அதிக அக்கறை கொண்டவராகவே அவரை இந்த 8 ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன்.
தற்போது அவர், அவரது ஆத்ம் திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார். இதை ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் மகிழ்ச்சியான பெண் குடும்பத்திலும் மகிழ்ச்சியை விதைக்கிறார். இத்திரைப்படம் லட்சோபலட்ச இல்லத்தரசிகள் மனதில் புது உத்வேகத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அண்ணி மிகப்பெரிய வெற்றியைப் பெற எனது வாழ்த்துகள்" என்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.