நட்புக்காக மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரம்: சந்தானம் முடிவு

தனக்கு நெருக்கமான நண்பர்களின் படங்களில் மட்டுமே இனி காமெடியனாக நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சந்தானம்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சந்தானம். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்தார். முழுக்க நாயகனாக 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது 'இனிமே இப்படித்தான்' படத்தில் நடித்திருக்கிறார்.

இனி தனக்கு நெருக்கமான நண்பர்களாக வலம் வரும் நடிகர்கள் ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட சிலரின் படங்களில் மட்டுமே காமெடியனாக நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறார் சந்தானம்.

தொடர்ச்சியாக தன்னிடம் இருக்கும் உதவியாளர்கள் அனைவரையும் இயக்குநராக்கி, அவர்களுடைய படங்களில் நாயகனாக நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

'இனிமே இப்படித்தான்' படத்தின் இயக்குநர்களான முருகன், ப்ரேம் ஆனந்த் இருவருமே சந்தானத்திடம் காமெடி வசனங்கள் எழுதுபவர்களாக நீண்ட காலம் பணியாற்றியவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்தின் இந்த முடிவால், தற்போது பல காமெடி நடிகர்களுக்கு வாய்ப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE