எங்களுக்குள் பிரச்சினையா? - 10 எண்றதுக்குள்ள படக்குழு விளக்கம்

விக்ரம், விஜய் மில்டன், ஏ.ஆர்.முருகதாஸ் மூவருக்கும் இடையே பிரச்சினை என்று வெளியாகும் செய்திகளுக்கு '10 எண்றதுக்குள்ள' படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

விக்ரம், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் '10 எண்றதுக்குள்ள'. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை விஜய் மில்டன் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

சில நாட்களாக விக்ரம் - விஜய் மில்டன் இடையே பிரச்சினை, விஜய் மில்டன் - ஏ.ஆர்.முருகதாஸ் இடையே பட்ஜெட் மிகவும் அதிகமாகி விட்டது என பிரச்சினை என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இப்படம் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. எந்த ஒரு பிரச்சினையும் இதுவரை யாருக்குள்ளும் வந்ததில்லை என்பது தான் உண்மை. இன்னும் 4 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அக்காட்சிக்கு சரியான ரயில்வே தண்டவாளங்கள் அடங்கிய இடத்தை தேர்வு செய்து வருகிறோம். விரைவில் அந்த படப்பிடிப்பும் முடித்துவிடும். டப்பிங் பணிகள் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த வாரம் படத்தின் முதல் பாதி பின்னணி இசைக்காக கொடுக்க இருக்கிறோம்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் விஜய் மில்டன் இன்னொரு கதையை விக்ரமிடம் சொல்லி, அக்கதையில் நடிக்க விக்ரமும் சம்மதம் தெரிவித்துவிட்டார். தயாரிப்பாளரும் முடிவாகிவிட்டது. அது தெரியாமல் படக்குழுவினரிடையே பிரச்சினை என்று எழுதுகிறார்கள். இத்தகைய தகவல்கள் குறித்து விக்ரம், முருகதாஸ், விஜய் மில்டன் மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்து, கூட்டாக ஒரு பத்திரிகையாளர் செய்தி ஒன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE