‘நண்பேண்டா’படத்துக்கு வரிவிலக்கு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

‘நண்பேண்டா’ திரைப்படத்துக்கு வரி விலக்குக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், ‘ரெட் ஜெயன்ட் மூவி மேக்கர்ஸ்’ என்ற பட நிறுவனத்தின் மூலம் ‘நண்பேண்டா’ என்ற படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியானது. இப்படத்துக்கு கேளிக்கை வரி சலுகை கோரி, தமிழக அரசிடம் உதயநிதி ஸ்டாலின் விண்ணப்பித்தார். ஆனால், கேளிக்கை வரி விலக்கு அளிக்க அரசு மறுத்து விட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரெட் ஜெயன்ட் பட நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. மனுவில், ‘தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக தமிழில் தலைப்பு வைத்துள்ள திரைப்படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக் கிறது. நண்பேண்டா படத்துக்கு வரிவிலக்கு கோரி மார்ச் மாதம் விண்ணப்பித்தோம். இதையடுத்து எங்களது படத்தை பார்த்த நிபுணர் குழு, இப்படத்தில் ஆபாசம், வன்முறை காட்சிகள் இருப்பதாக வும், ஆங்கில சொற்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது.

ஆனால், இப்படத்துக்கு சென்சார் போர்டு அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய படம் என்ற முறையில் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே, எங்களது படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ’ என்று கோரியிருந்தார்.

இம்மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து, மனு மீது பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, நண்பேன்டா படத்துக்கு வசூலிக்கப்படும் கேளிக்கை வரியானது, இவ்வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வரும் 7 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE