24 தலைப்பு பிரச்சினை: அனில் கபூர் - சூர்யா விரைவில் சமரசம்?

அனில் கபூருக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே '24' என்ற தலைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையில் சமாதானம் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

20 செஞ்சூரி பாக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க டி.வி தொடரான '24' என்ற தொடரின் ரீமேக் உரிமையை அனில் கபூர் வைத்துள்ளார்.

இந்நிலையில், விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் '24' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியிருக்கிறது. தொடர்ச்சியாக ஒரு மாதக் காலம் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தற்போது மலேசியாவில் இருக்கும் அனில் கபூர் இது குறித்து பேசியபோது, "நான் சூர்யாவிடம் பேசினேன். நாங்கள் ஒரு சமரசத்தை எட்டுவோம் என நினைக்கிறேன். நமக்கு சொந்தமான பிராண்ட், பெயர்களை பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கைதானே" என்றார்.

முன்னதாக, 24 படத்தின் தலைப்பு வடிவம், போஸ்டர் வடிவம் அனைத்தும் 24 டிவி தொடரைப் போலவே இருந்ததால், படத்துக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தார் அனில்கபூர்.

இது தொடர்பாக 24 இயக்குநர் விக்ரம் குமாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாமல் போனது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE