‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ உட்பட பல படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்ததாக விஷ்ணு, பிரயாகா நடிப்பில் ‘போடா ஆண்டவனே என் பக்கம்’என்ற படத்தை இயக்குகிறார். படத்தின் ஆரம்பகட்டப் பணிகளில் பரபரப்பாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
தொடர்ந்து கமர்ஷியல் படங்களை மட்டுமே எடுக்கிறீர்களே?
நான் கமர்ஷியல் படங்களை எடுத்தாலும் அதில் மசாலாத்தனம் மட்டுமே இருப்பதில்லை. எல்லாவற்றையும் ஒரு அளவோடு திட்டமிட்டே கொடுக்கிறேன். அதே நேரத்தில் ஒரு தயாரிப் பாளருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கவேண் டிய கடமையும் எனக்கு உள்ளது. என் சொந்தப் படங்களை வேண்டுமானால் வேறுமாதிரியான படங்களாக செய்யலாம்.
அவற்றின் வெற்றி தோல்விகள் என்னோடு போய்விடும். ஆனால் அடுத்தவர் பணத்தில் வித்தியாசமாக முயற்சிக்கிறேன் என்று இறங்கி அதனால் தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டால், அது சரியாக இருக்காது. எனக்கு அதில் உடன்பாடும் இல்லை.
‘போடா ஆண்டவனே என் பக்கம்’ படத்தின் கதை உங்களுடையதா?
நான் ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ ஆகிய இரண்டு படங்களை மட்டுமே ரீமேக் செய்திருக்கிறேன். ‘ஜெயங்கொண்டான்’, ‘வந்தான் வென்றான்’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ஆகிய படங்களுக்கு சொந்தமாக கதை எழுதினேன். ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ படத்தின் கதையும் என் சொந்த கதைதான்.
உங்களின் பெரும்பாலான படங்களில் பயணம் ஒரு முக்கியமான அங்கமாக அமைகிறதே?
அப்படி இருக்க வேண்டும் என்று திட்ட மிட்டு செய்வதில்லை. படத்தின் கதையில் பய ணம் இருந்தால் புதிய கதாபாத்திரங்கள் இயல் பாக வந்து ஒட்டிக்கொள்வார்கள். புதிய இடங்களைக் காட்ட முடியும். அது ரசிகர்களுக்கு புதுவிதமான உணர்வையும், அழகியலையும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்தப் படம் முழுக்க சென்னையை மையப்படுத்தி இருக்கும்.
இப்படத்துக்கு நாயகன் நாயகியாக விஷ்ணுவை யும், பிரயாகாவையும் எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
இப்படத்தின் நாயகன் பொறியியல் படிப்பை முடித்த ஒரு இளைஞன், இன்றைய இளைஞர் களின் பிரதிபலிப்பாக நாயகன் இருக்கவேண் டும். அதற்கு விஷ்ணு மிகச்சரியாக இருந்தார். மறுபக்கம் படத்தின் நாயகி பொறியியல் படிப்பை தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு மாணவி. இதற்கு பிரயாகா பொருத்தமானவராக இருந்தார். இருவரும் இயல்பாகவே படத்தோடு இணைந்துவிட்டார்கள்.
படப்பிடிப்பை எப்போது தொடங்கப்போகிறீர்கள்?
ஹீரோ, ஹீரோயின் தேர்வு முடிந்து மற்ற கதாபாத்திரங்களை தேர்வுசெய்து வரு கிறோம். இப்படத்தை பி.ஜி.முத்தையா ஒளிப் பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். படத் தின் முதல் கட்ட வேலைகளை தொடங்கி விட்டோம். ஜூன் மாதம் தொடங்கி ஜூலையில் படப்பிடிப்பை முடிக்கப்போகிறோம். செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இன்றைய சூழ்நிலையில் தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் லாபம் ஈட்ட முடிகிறதா?
மூன்றரை கோடிக்கு எடுக்கப்படும் படங் களாகட்டும், 40 கோடியில் எடுக்கப்படும் படங் களாகட்டும் எல்லாமே 2 வார கணக்கில்தான் இங்கே திரைக்கு வருகிறது. இதில் மூன்றரை கோடிக்கு எடுக்கப்படும் படம் சரியாக போய் சேரும் பட்சத்தில் தப்பித்துக்கொள்கிறது.
40 கோடி, 50 கோடியில் எடுக்கப்பட்ட படம், குறிப் பிட்ட அந்த 2 வாரங்களில் செலவு செய்த பணத்தை எடுக்க முடிவதில்லை. திரையரங்க ரிலீஸை முறைப்படுத்தினால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும். 100 கோடிக்கு எடுக்கப்படும் ஒரு திரைப்படம் குறைந்தது 50 நாட்கள் ஓடக் கூடிய வழிமுறைகளை தயாரிப்பாளர் சங்கம் ஏற்படுத்த வேண்டும்.
முன்பெல்லாம் ‘மவுத் டாக்’ என்று சொல்லக் கூடிய வாய்வழி விளம்பரத்தால் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ‘ஒரு தலை ராகம்’ முதல் வாரம் சரியாக போகவில்லை. ஆனால் இரண்டாவது வாரத்தில் அது நல்ல திரைப் படம் என்று பேசப்பட்டு அதன்பிறகு பெரிய அளவில் போய் சேர்ந்தது. அப்படி ஒரு நல்ல திரைப்படம் வாய் வழியாக போய் மக்களை சேர்வதற்குள் திரையரங்கில் இருந்து அந்தப் படத்தை எடுத்துவிடுகிறார்கள். இதையெல்லாம் சரியாக முறைப்படுத்த வேண்டும்.