ஏப்.14-ல் பர்ஸ்ட் லுக்?- புலி படக்குழு விளக்கம்

By ஸ்கிரீனன்

ஏப்ரல் 14-ம் தேதி 'புலி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதாக கசிந்த தகவல்களுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே, படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. ஆனால், எப்போது பர்ஸ்ட் லுக் என்பதை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஏப்ரல் 14ம் தேதி 'புலி' பர்ஸ்ட் லுக் வெளியாகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "முதலில் நாங்கள் இன்னும் பர்ஸ்ட் லுக் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதையே தீர்மானிக்கவில்லை.

முன்னணி நடிகர்கள், நடிகைகள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருவதால் அனைவரது தேதிகளையும் வாங்கி படப்ப்பிடிப்பு நடத்தி வருகிறோம். இப்போதைக்கு யாருடைய தேதிகளும் வீணடிக்காமல் படப்பிடிப்பை முடிப்பதிலேயே எங்களது முழு கவனமும் இருக்கிறது.

தற்போது கேரளாவில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயக்குநரும், பர்ஸ்ட் லுக் வடிவமைக்கும் ட்யூனி ஜானும் உட்கார்ந்து பேசினால்தானே பர்ஸ்ட் லுக் எப்படி இருக்கவேண்டும் என்பது முடிவு பண்ண முடியும். அதுவே இன்னும் நடக்கவில்லையே" என்றார்கள் புலி படக்குழுவினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE