தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.9.12 கோடி அள்ளியது 'ஆரம்பரம்'
அஜித்தின் 'ஆரம்பம்' படம், வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9.12 கோடி வசூலை அள்ளியிருக்கிறது.
தீபாவளியான இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையின் வசூல் இன்னும் மிகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் படங்களிலேயே வசூலில் சாதனை படைக்கும் படமாக ஆரம்பம் உள்ளது என்றும், வார இறுதி ஒபனிங் வசூலில் உலக அளவில் சாதனை படைக்க வாய்ப்புள்ளது என்றும் வர்த்தக நிபுணர் திரிநாத் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பம் படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அவரது படம் வெளியாகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் மொய்த்துக் கொள்ளும்.
அஜித்துடன் இப்படத்தில் ஆர்யா, நயன் தாரா, ராணா, டாப்ஸி என பலரும் இணைந்திருப்பதால், அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி ஆர்யாவின் ரசிகர்களும் இப்படத்தை பார்க்க ஆர்வமாக இருந்தனர்.
'பில்லா' படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் - அஜித் இணைந்திருப்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு 'ஆரம்பம்' படத்திற்கு டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்றது. ஒரு வாரத்திற்கு பல்வேறு திரையரங்குகளில் ஃபுல்லாகிவிட்டது.
தமிழ்நாட்டில் பெரிய விநியோக NSC ஏரியாவை ஐங்கரன் வாங்கியது. அவர்களிடம் இருந்து செங்கல்பட்டு ஏரியாவை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியது.
செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 108 திரையரங்குகள் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் பல்வேறு திரையரங்குகளில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'பாண்டிய நாடு' படங்கள் வெளியீட்டால், 2 நாட்களுக்கு மட்டும் 'ஆரம்பம்' திரையிடப்பட்டது.
சென்னை மட்டுமன்றி கோயம்புத்தூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஏரியாக்களில் 'ஆரம்பம்' படத்தின் புக்கிங் மற்றும் வசூலைப் பார்த்து விநியோகஸ்தர்கள் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
இதுவரை வெளிவந்துள்ள அஜித் படத்தின் வசூல் சாதனையைக் கண்டிப்பாக முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஆரம்பம் பூர்த்தி செய்யும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.