எப்போதுமே போனில் பேசிக் கொண்டிருக்கும் வேடத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
'வாலு', 'வேட்டை மன்னன்' உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிம்பு.
சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் படம் தயாராவதால், இதுவரை இல்லாத அளவிற்கு படம் படுவேகமாக வளர்ந்து வருகிறதாம். இப்படத்தின் மூலமாக சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் எப்போதும் வீட்டின் கதவு அருகிலேயே நின்று த்ரிஷாவைக் காதலிக்கும் வேடத்தில் நடித்திருந்தார். அது போலவே இப்படத்தில் எப்போதுமே காதலியுடன் போனில் பேசிக் கொண்டே இருக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார் சிம்பு.
எப்போதும் போனில் பேசிக் கொண்டிருக்கும் சிம்புவை கலாய்க்கும் வேடத்தில் சூரி நடித்திருக்கிறார். நவம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் நாயகி, படத்தின் பெயர் என்ன போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இப்படம் குறித்து சிம்பு, “விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வீட்டின் கதவிற்கு அருகிலேயே நிற்பேன். இப்போது பாண்டிராஜ் படத்தில் எப்போதுமே போனில் பேசிக் கொண்டிருப்பேன். காதலர்கள் போனில் பேசுவது போன்ற காட்சிகள், பெரியளவில் வரவேற்பைப் பெறும்” என்று தெரிவித்து இருக்கிறார்.