கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1979ல் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற 'சங்கராபரணம்' படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் புகழை, உலக அரங்கில் பறைசாற்றிய படங்களில் முக்கியமான படம் “சங்கராபரணம்”. தெலுங்கு மொழியில் வெளியாகி ஆந்திராவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தது.
பரத நாட்டியத்தையும், இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட கதையில் வெட்டுக் குத்து, ஆபாசம், வன்முறை என கமர்ஷியல் வகையறா எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பியது.
35 வருடங்களுக்கு பிறகு சங்கராபரணம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. சினிமாஸ்கோப், DTS மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு 'சங்கராபரணம்' உருவாகிக் கொண்டிருக்கிறது.
சோமையா ஜுலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் நடித்த 'சங்கராபாரணம்' படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்து இருந்தார். தமிழுக்கான புது வடிவத்திற்கு ரவிராகவ் இசையமைத்துள்ளார்.
பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தினை இயக்கி இருந்தார் கே.விஸ்வநாத். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
”இந்த படைப்பை உருவாக்கிய கலை மேதை கே.விஸ்வநாத் அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம்” என்ற வாசகம் கொண்ட கார்டுடன் படம் ஆரம்பிக்கிறது.