பாஸ்கர் ஒரு ராஸ்கல் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது

'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக்கிற்கு 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' எனத் தலைப்பிட்டு படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மம்முட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளின் ரீ-மேக்கையும் தானே இயக்கவிருப்பதாக இயக்குநர் சித்திக் கூறி இருந்தார். தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடிப்பது உறுதியானது.

நாயகியாக அமலா பாலும், குழந்தையாக நைனிகாவும் நடிப்பது இறுதி செய்யப்பட்டுள்ளது. 'தெறி' படத்தைத் தொடர்ந்து மீனாவின் மகள் நைனிகா ஒப்பந்தமாகியுள்ள படம் இதுவாகும். ஒற்றைப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் நட்பாகி, எப்படி பெற்றோரைச் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் கதையாகும்.

அமலாபால் மகளாக நைனிகா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அரவிந்த்சாமி மகனாக நடிப்பதற்கு ஜெயம் ரவி மகன் ஆரவ்வைக் கேட்டது படக்குழு. ஆனால், ஜெயம் ரவி மறுக்கவே தற்போது ஸ்ரீகாந்த் மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அக்கதாபாத்திரம் முடிவானவுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் பூஜை கொச்சியில் நடைபெற்றது. இதில் அரவிந்த்சாமி, அமலா பால் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE