நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்: கமலுக்கு ரஜினி ஆறுதல்

By ஸ்கிரீனன்

நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் கமல் என்று 'சந்திரஹாசன் நினைவஞ்சலி' கூட்டத்தில் ரஜினி ஆறுதல் கூறினார்.

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் லண்டனுக்கு சென்றிருந்த போது அங்கு காலமானார். ராஜ்கமல் நிறுவனத்தை நிர்வகித்து வந்தவர் சந்திரஹாசன். கமல்ஹாசனுக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் சந்திரஹாசன்.

சந்திரஹாசனுக்கு இரங்கல் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமல், ரஜினி, சத்யராஜ், நாசர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ரஜினிகாந்த் பேசியது, "நண்பர் கமலுக்கு 3 தகப்பனார்கள். பெற்ற தகப்பனாரைத் தொடர்ந்து, அவரை வளர்த்த தகப்பனார் சாருஹாசன். அவரை ஆளாக்கிய சந்திரஹாசன் மூன்றாவது தகப்பனார்.

சந்திரஹாசனை இரு முறை மட்டுமே சந்தித்துள்ளேன். சாருஹாசனோடு நிறைய பழகியுள்ளேன். ஆனால், சந்திரஹாசனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பொருளாதாரத்தில் இப்போதுள்ள நடிகர்களை ஒப்பிடுகையில் அவர்களை வைத்திருக்கும் பணத்தைக் கூட கமல்ஹாசன் வைத்திருக்கவில்லை. அது தான் உண்மை. ஆனால், பணத்தைப் பற்றி அவர் எண்ணவே இல்லை, கவலையும் படவில்லை.

இப்போது அவரிடம் கொஞ்சம் பணம் மிஞ்சியிருக்கிறது எனச் சொன்னால் அதற்குக் காரணம் சந்திரஹாசன்தான். இனிமேல் இருக்கும் பணத்தை எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறார், எப்படி சம்பாதிக்கப் போகிறார் என்று நான் யோசிக்கிறேன். கமல்ஹாசனைப் போல ஒரு கோபக்காரரை நான் பார்த்ததே இல்லை. அவருடைய கோபத்தை 10% மட்டுமே பார்த்துள்ளீர்கள், நான் 100% பார்த்துள்ளேன். அதற்காகத்தான் அவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பேன். அவரை அன்புடன் சமாதானப்படுத்துவது சாருஹாசன், அதட்டிச் சொல்வது சந்திரஹாசன். தற்போது அனைத்து பொறுப்பும் சாருஹாசன் மீதுதான் உள்ளது. அவர் தனது உடல்நிலையைக் கவனித்துக் கொண்டு கமல்ஹாசனுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

அனந்து, பாலசந்தர், சாருஹாசன், சந்திரஹாசன் ஆகிய நால்வரும் தான் கமலுடைய உயிர்கள். 3 பேர் உயிருடன் இல்லை. ஆனால் அவர்களுடைய ஆத்மா எப்போதுமே கமலுடன் இருக்கும். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் கமல்" என்று தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE