இளம் நடிகர்களுக்கு முன்னுதாரணம் யார்? - விஷால் சாய்ஸ் சிவகார்த்திகேயன்!

தற்போதுள்ள இளம் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் திகழ்கிறார் என்று விஷால் புகழாரம் சூட்டினார்.

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் 'பூஜை' தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை விஷால் தயாரித்து இருக்கிறார். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்தார்கள். மேல் முறையீட்டு குழுவிற்கு சென்றது படக்குழு. அங்கேயும் யு/ஏ சான்றிதழே கிடைத்தது.

இதுவரை வெளிவந்த விஷால் படங்களை விட, மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது 'பூஜை'.

'பூஜை' படம் தொடர்பாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "தற்போதுள்ள இளம் நடிகர்களில் யாருடைய வளர்ச்சி வியக்க வைக்கிறது?" என்ற கேள்வியை முன்வைத்தேன்.

அதற்கு சற்றும் யோசிக்காத விஷால், "ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்களை விட்டுவிடுங்கள். அதற்கு பிறகு இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தி இருப்பது சிவகார்த்திகேயன் தான்.

அவருக்கு என்ன வரும், என்பதை அறிந்து, அதற்கு தகுந்தவாறு படங்கள் செய்து கொண்டிருக்கிறார். மற்றவர்கள் சொல்ல வேண்டுமானால் தயங்கலாம். ஆனால், அது தான் உண்மை. எனக்கு தயக்கமில்லை. அதற்கு பிறகு விஜய் சேதுபதி.

இப்போது இயக்குநர் ஒரு கதையை எழுதினால், அதற்கு ஏற்றவாறு நிறைய நாயகர்கள் இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது." என்றார் விஷால்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE