தென்னிந்தியர்களின் சினிமா மோகத்தை பயன்படுத்திக் கொள்கிறாரா மோடி?- நடிகர்களுடனான தொடர் சந்திப்பின் பின்னணி

பிரபல நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை தேர்தலில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே அவர்களை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சந்தித்து வருகிறார்.

தமிழகத்தில் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி, அறிஞர் அண்ணா, எம்.ஆர்.ராதா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர்., சிவாஜிகணேசன், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத் குமார் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சினிமா தொடர்புடைய நான்கு முதல்வர்களையும் (ஜானகியை சேர்த்து ஐந்து) தமிழகம் கண்டிருக்கிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவிலும் இதே நிலை தான். என்.டி.ராமராவை முதல்வ ராக்கி அழகு பார்த்தனர் அந்த மாநில மக்கள். சினிமா ஹீரோக்களை நிஜவாழ்விலும் ஹீரோக்களாக்கி பார்க்கும் தமிழக, ஆந்திர மக்களின் மனநிலையை உணர்ந்தோ என்னவோ, இந்தத் தேர்தலில் இரு மாநில நடிகர்களுடன் நரேந்திர மோடி மிகவும் நெருக் கம் காட்டி வருகிறார்.

ஆந்திராவில் புதிய கட்சியைத் தொடங்கிய பிரபல நடிகரும் சிரஞ்சீவியின் சகோதரருமான பவன் கல்யாண், கடந்த மார்ச் 22-ம் தேதி மோடியை சந்தித்துப் பேசியபோதே ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்றொரு நடிகரான நாகார்ஜூனாவும் மோடியை சந்தித்தார். இந்த இருவருக்குமே கணிசமான ரசிகர்கள் உள்ளனர்.

சென்னை வந்த மோடி, நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்தகட்ட பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்துள்ள மோடி, கோவையில் புதன்கிழமை இரவு நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியுள் ளார். இரண்டு பெரிய நடிகர் களுடனான சந்திப்பின் மூலம், அவர்களது ரசிகர்களை தன் பக்கம் இழுக்கவே மோடி திட்ட மிட்டிருப்பது தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE