‘இந்தியன் 2’ அப்டேட்: படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

 ‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கலை இயக்குநர் முத்துராஜ் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’.அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின் போது, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா.

இதற்காக அரசியல் பணிகளுக்கு இடையே, தனது உடலமைப்பை மாற்றியமைக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படப்பிடிப்புக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் இன்று (நவம்பர் 12) தொடங்கப்பட்டு இருப்பதாக இப்படத்தில் கலை இயக்குநராக பணிபுரியும் முத்துராஜ் தெரிவித்திருக்கிறார்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர். கமலுடன் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு எதையுமே உறுதிப்படுத்தவில்லை. ஒளிப்பதிவாளராக ரவிவர்மான் பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE